February 27, 2011

அர்ச்சனை-4 யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி
அம்புஜம் பெட்ரூமில் நுழையும் போதே, பஞ்சு  ஒரு பக்கமாகப் புரண்டு படுத்தார். கொட்டாவி விடுவது போல் பாவ்லா காட்டினார்.
``...பாவம். ஆபீஸில் ஏகப்பட்ட வேலை... தூங்கறதுக்கு டைம் கிடைக்கலை போல் இருக்கு. அதுதான் தூக்கம் வந்துடுத்து. ஆபீஸ  நாடகம் ஒத்திகை பார்க்கிற மாதிரி, கொட்டாவி விடறது, குறட்டை விடறது, முழித்துக் கொண்டே தூங்கறது எல்லாம் ஒத்திகை பார்க்கறாரோ, என்னவோ!  மனுஷன். அப்பதானே பொண்டாட்டி தொணதொணப்பிலிருந்து தப்பிக்கலாம்?
யார் அப்படிச் சொன்னதுன்னு கேக்கறீங்களா? நீங்க சொன்னீங்கன்னு நான் சொல்லலை. பாகீரதி சொன்னதைச் சொல்றேன். பாகீரதி யாருன்னு தெரியாதா? இதை நம்பச் சொல்றீங்களா? `பகீர்'ரதின்னு சொல்வீங்களே, உங்க உப்பிலியின் ஒய்ஃப். அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று என்னைக் கேட்டால்?... நல்லா இருக்கே .கேள்வி!.. அவளுக்கு அவ வீட்டுக்காரர் உப்பிலி சொல்லி இருப்பார். உப்பிலிக்கு அவரோட பெஸ்ட் ஃப்ரெண்ட் பஞ்சு சொல்லி இருப்பார்.
நான் நச்சுதான், தொணதொணப்புதான். பிக்கல் பிடுங்கல்தான்... அதனாலதான் என்னை பொண்டாட்டின்னு வெளியில சொல்லிக்க உங்களுக்கு வெட்கமா இருக்கு.

ஆமாம்... நான் இல்லாததும் பொல்லாததும்தான் சொல்றேன். நேற்று சாயங்காலம் கோயிலுக்குப் போகும் போது எதிரே ஒரு மோகினி வந்தாளே, அவளைப் பார்த்ததும் அண்ணலும் இளித்தான், அவளும் இளித்தாள். அவள் யாரு? இளிக்கிற அளவுக்கு என்ன நெருக்கம் என்று இந்த க்ஷணம் வரை எனக்குச் சொல்லலை. அவளுக்கு என்னை அறிமுகம் கூட செய்து வெக்கலையே... பாவம், சொல்லிக்க வெட்கமாக இருந்திருக்கும்! அவள் கழுத்தை ஒடித்து, கண்ணைச் சுழற்றி பார்த்த பார்வையே சரியாக இல்லை. இதோ பாருங்க... அம்புஜம் மக்காக இருந்த காலம் மலை ஏறியாச்சு. அவளுக்கு ஞான திருஷ்டி இல்லாவிட்டாலும், மனுஷாளை எடை போடத் தெரியும். ஏதோ கண்ணிலே சாளேசுவரம் வரலை... ஒரு பார்வையிலேயே மனுஷாளின் தராதரத்தைக் கண்டுபிடிச்சுடுவேன்.
ஆஹா... அவளைத் தப்பாகச் சொல்லக் கூடாதா? அடாடா... என்னமா உருகுகிறார்! பொண்டாட்டி தவிர எல்லாரும் ப்த்தரை மாத்துத் தங்கம், நல்லவங்க; நம்பகமானவங்கன்னு . சொல்றீங்க... எனக்கு எல்லாரும் தளுக்கு மினுக்கு சுந்தரிகள்தான். பல்லை இளிக்கிறவர்கள்தான்.  அது சரி, அப்படி நான் எங்கே. எப்போ  சொன்னேன். இந்த பாகீரதியைத்தான் சொன்னேன். அவள்தான்  தன் பேரை பேஷன் பேரா மாத்திக்கப் போறாளாம். அனுஷ்காவோ, கத்திரிக்காவோ ஏதோ ஒரு பேர்...
அவள் பார்வையே சரியில்லை. அவள் எதுக்கு ஒரு உதட்டுச் சுழிப்புடன் சிரிக்கணும்... என்னது, நீங்க பாக்கலையா? அவள் தெருக்கோடியில் வரும் போதே நீங்க வெச்ச கண்ணை எடுக்காமல் பார்த்துட்டு இருந்ததை நான் பார்த்துண்டுதான் இருந்தேன்.

February 22, 2011

From my scrapbook:

Daffynitions 
Best man -- The man who isn't getting married
Coward - One who in a perilous emergency thinks with his legs
Flirtation -- Wishful winking
Miniskirt - Tempt-dress
Mini skirt - The thigh is the limit
Undertaker- The last guy to let you down
Snoring - Sheet music
Family get-gether - Sibling revelry
Fire place repair - Open hearth surgery
Pasta - Noodle work
Reducing salon - Thinner sanctum
Hangover -  The moaning after
Train reservation - Berth right
Uninspired painter - Blandscape artist
Beekeeper - Unstung hero
=========From my scrapbook


February 17, 2011

வீரகுண பாண்டியனின் காதலி -எழுத்தாளர் ஏகாம்பரம் எழுதியது

  சரித்திரக் கதைகள் பல புருடாவாக இருக்கின்றன என்று பலர் சொல்வதால் ஆதார பூர்வமான சரித்திரக் கதையை  எழுதித் தரும்படி எழுத்தாளர் ஏகாம்பரத்திடம் கேட்டோம். அவர் எழுதி தந்த முதல் அத்தியாயம். இது! ( இதையே கடைசி அத்தியாயமாகவும் செய்து விடப் போகிறேன்!!)


வீரகுண பாண்டியனின் காதலி 
`ஈராயிரம்1 ஆண்டுகளுக்கு2 முன்பிருந்த3 வீரகுண4 பாண்டிய5 மன்னனின் சௌந்தர்யமே6 உருவான மணிமண்டபத்தின்7 மீது குணவாயில்8 எழுந்த கதிரவன் தன் தேஜோமயமான9 கிரணங்களை மகோன்னதமாகவும்10 ஜாஜ்வல்யமாகவும்11 வீசிக் கொண்டிருந்தான்.
(தொடரும்) 12

அடிக்குறிப்புகள்:
1. ஈராயிரம் என்பதைப் பதம் பிரிப்பின் ஈர் ஆயிரம் என்றாகும். சிலரது தலைமுடியில் ஈர், பேன் முதலியவை ஆயிரக் கணக்கில் இருக்கும். அந்த ஈரை இது குறிக்காது. எனினும் நீலகண்டராய சிங்கரையர் நிகண்டில் ஈர் என்பது இரண்டைக் குறிக்கும் என்றிருப்பதை நோக்குமிடத்து இது இரண்டாயிரம் என்பதைக் குறிக்கும் எனலாம்.
2. ஆண்டு எனப்படுவது ஆண்-டூர் என்பதன் சுருக்கம். ஆண்களுக்கு ஆணான சூரியன் ஒரு தரம் பூமியை வலம் வரும் காலத்திற்கு, ஆணைச் சுற்றி ஒரு டூர் போய்விட்டு வர ஆகும் பொழுதிற்கு ஆண்டூர் என்பதாகும். இதுவே வழக்கில் ஆண்டு என்றாகி, ஒரு வருஷத்தைக் குறிக்கும் சொல்லாயிற்று. இந்த விளக்கம் டூரிஸ்ட் இலாகாவின் பழைய குறிப்பேடுகளில் காணப்படுகிறது.
3. இந்தச் சொல் `முன் பிறந்த' என்றிருக்க வேண்டும் எனப் பல கல்வெட்ட ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதாவது இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு பிறந்த என்று பொருள்படும். `முன்பிருந்த' எனின் ஆண்டு என்பதற்கு முன்னே இருந்த என்ற கருத்து வருகிறது. ஆண்டு என்பது உருவமற்றது. ஆதலால் அதற்கு முன்பு எப்படி ஒருவர் இருக்க முடியும்? பிறந்த என்பதே ஏற்புடைய சொல்லாகும்.
4. `நீரகுண' என்றும் வழக்கில் இருந்தது. இது `வர்லாரே டி பாண்ட்யா' என்ற பழைய பிரெஞ்சுப் புத்தகத்தில் உள்ள தகவல். மனதில் இரக்கம் மிகுந்தவன் என்ற பொருளில் `ஈரகுண' என்றும் இருக்கலாம். இது முற்றிலும் கரையானால் அழிந்து போன பழைய ஏட்டுச் சுவடியில் பல இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்.
5. சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள `பாந்தியன் தெரு' உண்மையில் `பாண்டியன் வீதி' என்றுதான் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்தது. வீதியின் பெயரை எழுதிய பெயிண்டர் சற்று காது மந்தமுடையவராதலால் பாண்டியன் என்ற சொல் பாந்தியன் என்று அவர் காதில் விழுந்திருக்க வேண்டும். `தி ஹிஸ்டரி ஆஃப் டெஃப் பெயிண்டர்ஸ் ஆஃப் தி கார்ப்பரேஷன் ஆஃப் மெட்ராஸ்' என்ற ஏழு தொகுதியுள்ள புத்தகத்தின் மூன்றாவது தொகுதியில் 768ம் பக்கத்தைக் காண்க.

டி.வி. பேட்டிகள் -- கடுகு


ரேடியோ, டி.வி. பேட்டிகளில் பல சமயம் பேட்டி காண்பவர் பேசுவதுதான் அதிகபட்சமாக இருக்கும். தங்களுடைய கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுவதிலேயே முனைப்பாக இருப்பார்கள். இது எல்லா பேட்டியிலும் நடைபெறுவதுதான். பல வருஷங்களுக்கு முன்பு (JEAN PAUL SARTRE)  (ஜீன் பால் சார்த்ரே)விடம் நடத்திய பேட்டியிலிருந்து ஒரு பகுதியை ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். அதை என் டயரியில் எழுதி வைத்தேன். (நிஜமான பேட்டியா, நையாண்டியாக எழுதப்பட்டதா என்று இப்போது எனக்கு நினைவில் இல்லை.) இந்தப் பேட்டியைப் பார்த்து நான் ஒரு கட்டுரையை எழுதினேன். தினமணி கதிரில் வெளியான அந்தக் கட்டுரையை இங்கு தருகிறேன்.  ஜீன் பால் சார்த்ரே பேட்டியையும் இங்கு முதலில்போடுகிறேன்.

Interviewer:
Borrowing the terms employed by the structuralists, one might say that signification is the product of the articulation of signifiers themselves considered as non-articulated constituent elements; signification would be the unit of meaning which brings about the unification of the discontinuous data of your verbal material.

Sartre: Exactly!
----------------------------------------------

ஒரு சிறப்புப் பேட்டி!
எழுத்தாளர் ஏகாம்பரம் எழுதியது

முன்னுரை: சமீபத்தில் நான் காட்டாங்குடி சென்று வந்ததையும் அந்த அனுபவங்களை எழுதியதையும் அறிவீர்கள். `இவ்வளவு சிறப்பாக உங்களால் எப்படி எழுத முடிகிறது?' என்று உங்களில் பலர் என்னைக் கண்டு வியந்திருப்பீர்கள். இதற்கே வியந்து விட்டால் போதுமா? இன்னும் நான்- அதாவது எழுத்தாளர் ஏகாம்பரம்- எழுதும் கட்டுரைகளைக் கண்டு மேலும் வியப்படையப் போகிறீர்கள். இதோ ஒரு பேட்டி:
*                *                 *
டிம்பக்டு நாட்டிலிருந்து வந்துள்ள எழுத்தாளர் ஜீரோவைப் பார்க்க அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்குப் போகிறோம். புன்சிரிப்புடன் அவர், ``பிரபல தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர் திரு.ஏகாம்பரம் அவர்களே!'' என்று வரவேற்கிறார். பேட்டி ஆரம்பமாகிறது.

February 12, 2011

அர்ச்சனை - 3 ட்ராமாவுமாச்சு, வெங்கட்ராமாவுமாச்சு! --கடுகு


படுக்கையில் சாய்ந்தபடி பஞ்சு ஏதோ ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டு வேலையை முடித்து விட்டு சமையலறையை மூடிவிட்டு மாடிக்கு வந்த அம்புஜம், ``ஆமாம்... வீட்டுக்கு வர்றப்போ காபிப்பொடி வாங்கிண்டு வரச் சொன்னேனே... என்னது, வாங்கிண்டு வரவில்லையா? இது என்ன வீடுன்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? இல்லை, ஓட்டல்னு நெனைச்சுக்கிட்டு இருக்கீங்களா..? வீடு, வாசல், குடும்பம்னு அக்கறை இருந்தால் எப்படி மறப்பீங்க?
மறக்கலையா? கடை மூடியிருந்ததா? எப்போ? சரிதான். நீங்க பீரோ புல்லிங் கொள்ளைக்காரன் மாதிரி நடுராத்திரிக்கு வீட்டுக்கு வர்றப்போ எந்த கடைக்காரன் கடையைத் திறந்து வெச்சு காத்துகிட்டு இருப்பான்? சரி... கொஞ்சம் இப்படி திரும்பிப் பாருங்க. என்னமோ விழுந்து விழுந்து படிக்கறீங்களே... படிக்கிற சமயத்திலே படிக்கலை. படிச்சிருந்தால் தாலுகா ஆபீஸ்ல ஹெட்கிளார்க் வேலையிலே வந்து விழுந்திருக்க மாட்டீங்க...
நடுராத்திரிகு வந்ததுதான் வந்தீங்க... ஏன் லேட்டுன்னு சொன்னா வாய் முத்து உதிர்ந்துடுமோ? பசங்களைப் பற்றி ஒரு கேள்வி உண்டா? உமாவுக்கு சல்வார்-கமிஸ் வேணும்னு சொன்னேன். பணம் காசு கேட்கலை. என்ன படிக்கறீங்க, ஆடிட் ரிப்போர்ட்டா? ஆபீஸ் வேலையா? என்ன சொன்னீங்க..? டிராமா கதை வசனமா? எதுக்குப் படிக்கிறீங்க?
நெனைச்சேன்... டிராமா குரூப்ல சேர்ந்திருக்கீங்களா? இந்த வயசிலே இப்படி ஒரு ஆசையா? டிராமா ரிகர்சல் அது இதுன்னு லேட்டாக வர்றதுக்கு ஒரு சாக்குக் கிடைச்சது. ஆமாம், உங்களுக்கு நடிக்கத் தெரியும்னு யார் சொன்னது? ஏற்கனவே குடும்பத்தின் பேரில உங்களுக்கு சொல்ல முடியாத அளவு அக்கறை. இனிமேல் நடிகர் திலகமாயிடுவீங்க! அவ்வளவுதான்... வீடு அம்போதான்.

ஈயது விலக்கேல் --கடுகு


சில வாரங்களுக்கு முன்பு `காபியில் ஈ' என்ற பதிவைப் போட்டேன். அப்போது வெகு நாட்களுக்கு முன்பு ஈ ஜோக் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் புத்தகத்திலிருந்து சிலவற்றை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததை இப்போது கண்டுபிடித்தேன். அவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன். (ஒரு உத்தரவாதம்: இத்துடன் ஈ ஜோக் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்ற சந்தோஷச் செய்தியை உங்களுக்கு அளிக்கிறேன்.)
* என்ன... ஒரு ஈயா..? பரவாயில்லை சார், அதுவே பாதி ஈயாக இல்லையே என்று சந்தோஷப்படுங்கள்.
* ஔவையார் என்ன சொல்லி இருக்கிறார்? ஈயது விலக்கேல் என்றுதானே..? இருந்துட்டுப் போகட்டுமே சார்!
* காபி ஒன்றும் கொதிக்கிற சூட்டில இல்லை. ஈக்கு ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதீங்க.உங்களுக்கு ரொம்ப இளகின மனசு..”
* நல்ல காலம் பாத்தீங்க... பாத்துக் குடியுங்க.
* அப்படியா? இருங்க சார், முள்கரண்டி, கெச்சப் கொண்டு வரேன்.
* என்னது... சர்வர்னா கூப்பிட்டீங்க... நான் மானேஜர். ஈயைப் பத்தி சர்வரைக் கேளுங்க.
* அடப்பாவமே... மறுபடியும் தப்பு பண்ணிட்டேன். அந்த டேபிளுக்குக் கொடுக்க வேண்டிய காபியை உங்களுக்குக் கொடுத்து விட்டேன்!
* சும்மா சொல்லாதீங்க... இன்னிக்கு வெள்ளிக் கிழமை. எங்க ஹோட்டல்லே வெள்ளிக்கிழமையிலே நான்-வெஜ்ஜே கிடையாது.
* அது ஈ இல்லை, சிலந்தி வலை விழுந்திருக்கு. அது ஈ மாதிரி உங்களுக்குத் தெரியுது.
* ஈயா... வெரிகுட்! ஒரு சிலந்தியைக் கொண்டு வரேன். பாவம் சார்,, அது ரொம்பப் பசியாக இருக்கிறது.

February 07, 2011

திடீரென்று வந்தார்! -கடுகு

பெரிய விளம்பர நிறுவனங்களில் ஆண்டுதோறும்   இரண்டு மூன்று நாள் கிரியேட்டிவ் துறை, விளம்பர சேவைத் துறை, ஆடியோ-வீடியோ துறை, ஆர்ட் டைரக்டர்கள், காபி ரைட்டர்கள் எல்லாரையும் இரண்டு அல்லது மூன்று நாள் ஒரு கருத்தரங்கம் மற்றும் விவாதக் கூட்டம் என்று ஒரு பெரிய ஓட்டலில் நடத்துவார்கள்.
அந்த ஆண்டு விளம்பர நிறுவனம் வெளியிட்ட முக்கிய விளம்பரங்கள் பற்றியும், மக்களிடம் அந்த விளம்பரங்கள் பெற்ற பாதிப்புகளையும், வெற்றி தோல்விகளையும் விளக்குவார்கள். விளக்கிய பிறகு கேள்வி பதில்கள் நிகழ்ச்சியும் இருக்கும். தயவு தாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்கள், கேள்விகள் எல்லாம் இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் உரையை அபாரமாகத் தயாரித்துக் கொண்டு வருவார்கள். நிறைய `சிலைட்'கள் தயார் பண்ணி அவற்றைப் போட்டுக் காட்டி உரை நிகழ்த்துவார்கள். மிக மிகச் சுவையான உரைகளாகவும், ஒருவரை ஒருவர் மிஞ்சும் உரைகளாகவும் இருக்கும்.
ஒட்டுமொத்தமாக அந்த ஆண்டு கம்பெனி கையாண்ட விளம்பரங்களைப் பற்றி ஒரு விரிவான, ஆழமான பார்வை அனைவருக்கும் கிடைக்கும். எங்கு குறைபாடு உள்ளது, எதைச் சரியாகச் செய்யவில்லை, ஏன் ஒரு குறிப்பிட்ட விளம்பரம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, அதே மாதிரி ஏன் வேறு ஒரு விளம்பரம் எதிர்பார்த்ததை விட ஓஹோ என்று சாதித்தது என்பதெல்லாம் அலசப்படும்.

மூன்றாம் நாள் முடிவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா என்று கோலாகலமான பல நிகழ்ச்சிகள் நடக்கும்.
பூஸ்ட் விளம்பரங்களைக் கையாண்ட விளம்பர டீம் ஒரு ஆண்டு பரிசு பெற்ற சுவையான சம்பவத்தைக் கூறுகிறேன்.
பூஸ்ட் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இடம் பெற்றிருந்த கால கட்டம் அது. பத்திரிகை, டி.வி., ரேடியோ விளம்பரங்களில் `பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' (BOOST IS THE SECRET OF MY ENERGY)  என்று சொல்வார்.
அந்த ஆண்டு `பூஸ்ட்' விளம்பரங்களில் நிறையப் புதுமைகள் புகுத்தி எல்லா ஊடகங்களிலும் எங்கள் நிறுவனம் அதகளம் செய்திருந்தது.
வருடாந்திரக் கூட்டத்தில் பூஸ்ட் விளம்பரங்களைக் கையாண்டவர் - திருமதி திரிபாதி- மிகவும் உற்சாகத்துடன் அவரும், அவர் உதவியாளைகளும்  என்னென்ன விவாதித்தார்கள், என்ன செய்தோம் என்றெல்லாம்  விவரங்களுடன், கூறினார்.  வீடியோ, ஸ்லைட்கள் மூலம் திரையில் விளக்கப் படங்களைப் போட்டு உரை நிகழ்த்தினார். கடைசியில் பூஸ்ட் விளம்பரப் பாடல் போட்டார்.
ஆனால் பாடல் முடிந்ததும் கபில்தேவ் வசனம் வரவேண்டிய சமயத்தில் திருமதி திரிபாதி ஹாலில் உள்ள  எல்லா விளக்குகளையும் அணைக்கும்படி  ரகசியமாக  ஏற்பாடு  செய்திருந்தார். சட்டடென்று விளக்குகள் அணைந்தன. ஒரு சில  செகண்டுக்குப் பிறகு விளக்குகள் மீண்டும் வந்தபோது ஆச்சரியமான விஷயம் நடந்தது.
திரைக்கு முன் கபில்தேவ் - ஆம், கபில் தேவ் அவர்களே!- நின்று கொண்டு, ``பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி'' என்று உற்சாகமாகச் சொன்னார்.
கை தட்டலும், விஸிலும் பறந்தன். ஹோட்டலே குலுங்கியிருக்கும்.
அந்த ஆண்டு திருமதி திரிபாதிக்குப் பரிசு கிடைத்தது!
இதில் ருசிகரமான விஷயம் என்னவென்றால், கபில்தேவ் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஹோட்டலில் திரைக்குப் பின்னால் இருந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் திரைக்கு முன் தோன்ற வேண்டிய தருணத்திற்கு இரண்டு செகண்டுக்கு முன் தகவல் அனுப்பி, விளக்கு அணைக்கப்பட்டவுடன் இருட்டில் தட்டுத் தடுமாறி திரைக்குப் பின்னால் வந்து, விளக்குப் போட்டதும் `சட்'டென்று வேளியே வந்து, `பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்று கம்பீரமாகச் சொன்னார்.

அக்கா என்று அழைத்தார்! - கடுகு


சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். சீக்கிரமே சென்று விட்டதால் டாக்டர் வந்திருக்கவில்லை. ஆகவே சும்மா வெளியில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது சுமார் 50 வயதுள்ள பெண்மணி அங்கு வராந்தாக்களைப் பெருக்க வந்தார். இஸ்திரி போட்ட நூல் புடவை, நெற்றியில் விபூதிக் கீற்று, தலையில் பூ.

அவர் பெருக்கிக் கொண்டிருக்கும் போது மருத்துவமனையின் உள்ளே இருந்து ஒரு பெண் 20, 22 இருக்கும், வந்தார்.
அவர் ஜூனியர் டாக்டராக இருக்க வேண்டும் கொஞ்சம் காகிதத்தைச் சுருட்டி வைத்திருந்தார். அதை வெளியே பாதையில் போட்டபடியே பெருக்கிக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து, ``அக்கா... இந்தக் குப்பையையும் பெருக்கி எடுத்துக்கிட்டுப் போயிடுங்க'' என்றார்.
ஒரு கணம் நான் அசந்து போய் விட்டேன்.
அக்கா!
ஒரு ஜூனியர் டாக்டர், வேலைக்காரியை அக்கா என்றும், `எடுத்துப் போயிடுங்க' என்று மரியாதையாகவும் கூறியதைக் கேட்டு சிலிர்த்துப் போய் விட்டேன்.
வேலைக்காரி என்றால் ஒருமையில் தான் அழைப்பார்கள். `நீ, வா, போ, செய்' என்றுதான் உத்தரவு போடுவார்கள்.
அந்த ஜூனியர் டாக்டரின் பண்பு என்னை உறையச் செய்தது.
நிச்சயம் அந்த ஜூனியர் டாக்டர் சிறந்த மனிதநேயம் கொண்ட டாக்டராகவும் சேவை மனப்பான்மையுடன் மருத்துவத் தொழிலைச் செய்பவராகவும் மிளிர்வார் என்று எனக்குத் தோன்றியது.

February 02, 2011

அர்ச்சனை-2 சித்ராங்கி ஒரு ராங்கிக்காரி

வீட்டிற்குள் பஞ்சு நுழைந்தபோது இரவு மணி ஒன்று.  கதவைத் திறந்த அம்புஜம் மெகா அர்ச்சனைக்கு ஆயத்தமானாள்.
``வாங்க... வாங்க... சாப்பிடத் தட்டு போடட்டுமா? என்னது, சாப்பிட்டு ஆகிவிட்டதா? நல்லதுதான்.  என்ன, என்ன கேட்டீங்க? நானா? நான் இன்னும் சாப்பிடவில்லை. வீட்டில் ஒரு பைத்தியக்காரி சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாள் என்று உங்களுக்கு எங்கே நினைவிருக்கப் போகிறது? ஆபீஸில் ஓடாய் உழைத்து வீட்டுக்கு வருகிறாரே, வாய்க்கு ருசியா நாமதானே பாத்து போடணும்னு இருக்கறவள் நான். ’அவர் எப்படியாவது போகட்டும், நாம கொட்டி மூடிக்கலாம்’னு இருக்க எனக்குத் தெரியாது. எங்கம்மா அப்படி வளர்க்கலையே என்னை!  எனக்கும் பசி போய்ட்டுது. இரண்டு மூணு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்துக்கறேன். வயிற்றெரிச்சலும் தீரும்!

“என்னது, நல்லா சொன்னீங்களே, நீ சாப்பிட்டு விட்டு படுத்துக்கறதுக்கு என்ன என்றுதானே? சரி, படுத்துக்கறேன். அர்த்தராத்திரி கொள்ளைக்காரன் மாதிரி நீங்க கதவை இடிக்கிறபோது திறக்க வேண்டாமா?
ஆமாம்... என்னமோ வாசனை வர்றதே, ஆபீஸ்லே ஏதாவது பார்ட்டியா? எங்கே, என்ன சாப்பிட்டீங்க? அவன் சொன்னான், இவன் சொன்னான்னு கொஞ்சம் சாப்பிட்ட மாதிரி இருக்குதே...
”சரிதான். ஆபீஸில் மேனேஜர் பிறந்தநாள் விழாவா? அவர் குடிக்கட்டும், இல்லாவிட்டால் சாராயத்திலேயே குளிக்கட்டும். உங்க புத்தி எங்கே போச்சு?
இதபாருங்க... ஒவ்வொரு வீட்டுப் பொம்பளை மாதிரி எனக்கு கத்தத் தெரியாது. வாய் செத்த பூனையாக இருக்கறதாலே நீங்க ஆட்டம் போடறீங்க. ஷாப்பிங், அரட்டைக் கச்சேரி என்று எங்கேயும் போகத் தெரியாத அசமஞ்சம் நான்.
இதோ இருக்காளே, பக்கத்து வீட்டு சித்ராங்கி... அவ மாதிரி தாடகை உங்களுக்கு மனைவியா வந்திருக்க..... இல்லை, இல்லை, அதை ஏன் என் வாயால சொல்லணும்?

February 01, 2011

காகமும் வடையும் - கடுகு

இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் பிரபல தத்துவ மேதையாகப் புகழ் பெற்றுள்ள டாக்டர் தத்துப்பித்து சாமி (பத்மஸ்ரீ) தன் பேரக் குழந்தைக்குக் கதை சொல்கிறார்:
அம்பிப் பயலே, இன்று ஒரு கதை சொல்லப் போகிறேன். தலைப்பு: `காகமும் வடையும்'.

காகம் என்பது என்ன என்று உனக்குத் தெரியாதிருக்கலாம். கறுத்த நிறத்துடன் காகா, காகா என்று கத்தும் பறவை காகம். கறுப்பாக இருப்பவை எல்லாம் காகம் ஆகாது. கா, கா என்று கத்துவதெல்லாம் காகம் இல்லை. இம்மாதிரி பறப்பது எல்லாவற்றையும் காகம் எனக் கூற இயலாது. கன்ஃபூஷியஸ் என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா? உனக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? `ரிடக்ஷியோ அட் அப்ஸரிடம்' என்று கேள்விப்பட்டு இருக்கிறாயா? நல்லது. கதையை மேலே தொடர்வோம்:


காகத்திற்கு ஒரு நாள் பசி எடுத்தது. மற்ற தினங்களிலும் பசி எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்தக் குறிப்பிட்ட தினத்தில் அதற்குப் பசி எடுத்ததோ அந்த தினத்தில் அது என்ன செய்தது என்பதுதான் நம் கதைக்கு முக்கியம்.
எங்கெங்கேயோ பறந்து சென்றது. பல இடங்களில் அலைந்தது. பலன்? பூஜ்யம். உணவு அகப்படவே இல்லை. கீதையில் பகவான் கூறுகிறார்: `கர்மண்யேவாதி காரஸ்தே மா பனேஷு கதாசன'.
அதாவது, நாம் செய்ய வேண்டிய பணியைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பசியால் அவதிப்படும் நேரத்தில் கீதையின் உரையில் ஆழமான அர்த்தத்தையோ தத்துவத்தையோ யாரும் உணர மாட்டார்கள். அதுவும் எழுத்தறிவில்லாத காகம் உணரும் என்று நம்புவது மடத்தனம் ஆகும். இதே கருத்தை சுவாமி சின்மயானந்தா அழகாகக் கூறியிருக்கிறார். `கல்யாண கல்பதரு' 1941-ம் வருஷ மலரில் ஒரு கட்டுரையில் இதை நான் வலியுறுத்தி தெளிவாக எழுதியிருந்தேன். உம். எங்கே படித்திருக்கப் போகிறாய்? சரி... காகம் அலைந்து அலைந்து ஓய்ந்து விட்டது. உணவு அகப்படவே இல்லை. இதுதான் வாழ்க்கை. ஒரு புத்தகத்தைத் தேடுவோம். அது பெட்டியில் எல்லாப் புத்தகங்களுக்கும் அடியில் கடைசி கடைசியாக இருக்கும். நாம தேடும் புத்தகம் ஏன் பெட்டியின் மேலேயே இருக்கக் கூடாது? இதற்குத்தான் லா ஆஃப் சான்ஸ் அண்ட் மிஸ்சான்ஸ் என்று பெயர். இந்த விதியைத் தயாரித்த டாக்டர் அச்சுபிச்சுவின் கூற்று இதுதான்: `எதை எவன் எங்கு எதற்காகத் தேடிச் சென்று பார்க்கிறானோ, தடம் புரியாமல் தவிக்கிறானோ, வழி தெரியாமல் விழிக்கிறானோ, அவன் அதை அங்கு...' சரி, சரி... இதெல்லாம் உனக்குப் புரியாது. கதையைக் கவனி.

Things Work Out == Edgar A. Guest

Because it rains when we wish it wouldn't,
Because men do what they often shouldn't,
Because crops fail, and plans go wrong-
Some of us grumble all day long.
But somehow, in spite of the care and doubt,
It seems at last that things work out.


Because we lose where we hoped to gain,
Because we suffer a little pain,
Because we must work when we'd like to play-
Some of us whimper along life's way.
But somehow, as day always follows the night,
Most of our troubles work out all right.


Because we cannot forever smile,
Because we must trudge in the dust awhile,
Because we think that the way is long-
Some of us whimper that life's all wrong.
But somehow we live and our sky grows bright,
And everything seems to work out all right.


So bend to your trouble and meet your care,
For the clouds must break, and the sky grow fair.
Let the rain come down, as it must and will,
But keep on working and hoping still.
For in spite of the grumblers who stand about,
Somehow, it seems, all things work out.