May 15, 2017

1. ஒரு அம்மா 2. ஒரு பையன்

1. MOTHER'S DAY SPECIAL: வியப்புக்குரிய ரோஸ் கென்னடி

அமெரிக்க அதிபராக இருந்த J.F. கென்னடியின் அம்மா ரோஸ் கென்னடி ஒரு துடிப்பான பெண்மணி. (இவரைப் பற்றிய ஒரு சுவையான துணுக்கை ‘தாளிப்பு’வில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.) அதன் சுட்டி: அம்மாவுக்கு அட்வைஸ்.


“எங்கள் குடும்பத்தை ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் பசை எங்கள் அம்மாதான்” என்று கென்னடி ஒரு சமயம் கூறியிருக்கிறார்.
ரோஸ் கென்னடி ஒன்பது குழந்தைகளைப் பெற்றவர். ஒரு சமயம்,  தன் மகன் TED KENNEDYக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒரு கூட்டத்தில் அவர் கூறியது...”நான் ஒன்பதாவது தடவை கர்ப்பமாக இருந்தபோது சிலர் என்னிடம் கேட்டனர், ‘இப்படி கர்ப்பமடைவதால் உன் அழகு குலைந்து போய்விடாதா?’ என்று.” அவர்களுக்கு அப்போது நான் ஏதும் பதில் கூறவில்லை. இப்போது இந்தக் கூட்டத்தில் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். நான் ஒன்பதாவது குழந்தையைப் பெற்றெடுக்காமல் இருந்தால், இன்று ஒரு பிள்ளையுமில்லாதவளாக ஆகி இருப்பேன்” என்றார்.
         கூட்டத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ந்து போய்க் கண்களைத் துடைத்துக்கொண்டனர்.
ரோஸ் கென்னடி  ஒரு சமயம் சொன்னது: கடவுள் தர மறந்தது. நான் அவ்வப்போது எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வேன்: என் பிள்ளை, பெண்களுக்கு அழகு, கெட்டிக்காரத்தனம், நண்பர்களைத் தேடிக் கொள்ளும் திறமை, மற்றவர்களின் மதிப்பைச் சம்பாதிக்கும் வல்லமை, சுறுசுறுப்பு எல்லாம் கொடுத்த கடவுள், ஒன்றை மட்டும் கொடுக்கவில்லை-அவர்களுக்கு நீண்ட ஆயுள்.  இதை அவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம்
        
 ஒரு சமயம் ரோஸ் கென்னடி ஒரு புதிய ‘ஈவினிங் டிரஸ்’சை தனக்காக வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்ததும் அதைப் போட்டுப் பார்த்தார். தன் செக்ரெட்டரி பார்பரா கிப்சனைக் கூப்பிட்டு “எப்படி இருக்கிறது இந்த டிரஸ் எனக்கு?” என்று கேட்டார்.
         பார்பரா “ஆஹா...டிரஸ் அட்டகாசமாக இருக்கிறது. இந்த டிரஸ்ஸில் உங்களைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் உங்களுக்கு வயது 38 என்றுதான் சொல்வார்கள்.” என்றார்.
         முப்பத்தெட்டை எப்போதோ தாண்டியிருந்த ரோஸ், லேசாகச் சிரித்துக்கொண்டு குறும்புப் பார்வையுடன் “ஹேய் பார்பரா...நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும்...அதாவது நான் நிஜத்தில் 28 வயதுப் பெண்ணாகத் தோற்றம் அளிக்கிறேன் என்கிறாய்... அப்படித்தானே?” என்றார்.
        
ரோஸ் கென்னடி சொன்னவை:
         நான் என் பிள்ளை, பெண்கள், அவர்களின் குழந்தைகள் என்று குடும்பத்தோடு வெளியில் போகும் பல சமயங்களில் சர்ச்சிற்குச் சென்றுவிட்டுத்தான் போவோம்.  அவர்களிடம்சர்ச் என்பது வாரத்தின் ஒவ்வொரு நாளும் இடம்பெற வேண்டிய அம்சம். அது ஞாயிற்றுக் கிழமைகளுக்கு மட்டும் என்று ஒதுக்கப்படக்கூடாது. அல்லது முக்கியமான பண்டிகை தினங்கள் அல்லது நேரங்களில் போக வேண்டிய இடம் என்று நினைக்கக் கூடாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் போகலாம்; ஆண்டவனிடத்தில் பேசலாம். அவர் அங்கு எப்போதும் இருப்பார். நீங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார். உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்; பரிவோ அல்லது வேறு எது உங்களுக்குத் தேவைப்படுகிறதோ அதையும் தருவார்என்று பல தடவை சொல்லியிருக்கிறேன்.

2.  ஒரு பையன்!
அமெரிக்காவில் பழைய புத்தகங்களை அவ்வப்போது பல அமைப்புகள், நூல் நிலையங்கள்  BOOK SALE  நடத்தும். கிட்டத்தட்ட BOOK SALE  இல்லாத நாளே  இருக்காது  என்று சொல்லலாம்.

ஒரு சமயம் என் பெண்ணும் நானும்எங்கள் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த புக்-சேல் அரங்கிற்குச் சென்றிருந்தோம். சுமார் 20 ஆயிரம் புத்தகங்களை, துறை வாரியாக ஷெல்ப்களிலும் மேஜைகளிலும் பரப்பி வைத்திருந்தார்கள்.
புத்தகங்களைத் தேர்வு செய்து பையில் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது என் பெண் என்னிடம், "அதோ அந்த மூலையில்  புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டம் போட்ட சட்டை  ஆளைப் பாருங்கள். அவன் எங்கள்  ஆபீஸில் புள்ளி 
விவர  செக் ஷனை கவனித்துக் கொள்கிறவன். அவனைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். அவனைக் கண்டுகொள்ளாமல், நாம் புத்தகம் வாங்கிக் கொண்டு போகலாம்'' என்றாள்.  அப்படியே  செய்தோம்.

வீட்டுக்கு வரும்போது அவள் சொன்னாள், "அந்தப் பையன் மகா சோம்பேறி. அவனிடமிருந்து ஒரு தகவல் அல்லது புள்ளி விவரம் வாங்குவது மிகவும் கஷ்டம்.  ஏதாவது  கேட்டால், "எனக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?' என்று அரை மணி நேரம் ஏதேதோ சொல்வான். இத்தனைக்கும் நாம் கேட்ட தகவலைத் திரட்டித் தர பத்து நிமிஷம்கூடத் தேவைப்படாது. அந்தப் பத்து நிமிஷத்திற்கு வேலையைச் செய்ய ஏன் டயம் இல்லை என்பதை அரை மணி நேரம் விவரிப்பான். இப்படி விவரிப்பதற்கு மட்டும் அவனுக்கு நேரம் கிடைக்கும். சரியான அழும்புக்காரன்'' என்றாள்.
அவனைப் பற்றி நான் அத்தோடு விட்டு விட்டேன். இப்படிப்பட்ட கேரக்டர்கள், எல்லா  அலுவலகங்களிலும்  இருக்கிறார்கள்.
மறுநாள்  என் பெண் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும், என்னிடம், "அப்பா... ஒரு  இன்ட்ரஸ்டிங்  விஷயம்... நேற்று அந்த புக்-சேலில் ஒரு பையனைப் பார்த்தோமே, அவனைப் பற்றிச் சொன்னது ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டாள்.
"கழுத்தறுப்பு கேஸ் பையன்தானே? ஏன், எதற்குக் கேட்கிறாய்?'' என்று கேட்டேன்.
"சொல்கிறேன்... இன்று எனக்கு சற்று அவசரமாகச் சில புள்ளி விவரங்கள் தேவைப்பட்டன. அவன் அறைக்குச் சென்றேன். அவன் என்னைப் பார்த்ததும் முக மலர்ச்சியுடன், "மேடம்... வாங்க... நேற்று புக்-சேலில் உங்களைப் பார்த்தேன். நான் ஒரு மூலையில் இருந்தேன். நீங்கள் ஒரு மூலையில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.  ஆமாம், உங்களை ஒன்று கேட்க வேண்டும்... நீங்கள் நிறைய புக்}சேல் போவீர்களா?' என்று கேட்டான்.
"போவேன்... எங்கள் வீடு நிறைய புத்தகங்கள்தான். அடுத்த மாதம் மாண்ட்கிளிரில் ஒரு சேல் இருக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில் அங்கு போனால் கொள்ளை கொள்ளையாகப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வரலாம்... ஆமாம், நீங்களும் புத்தகப் பிரியரா?' என்று கேட்டேன்.
"ஆமாம்... மேடம்... மாண்ட்கிளேர் சேல் எங்கே என்று சொல்லுங்கள். எனக்கு சேல் தகவல்கள் அதிகம் கிடைப்பதில்லை...' என்றான். அதற்கு  நான், "அதற்கென்ன... உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன். எல்லா சேல் விவரங்களும் எனக்கு அத்துபடி' என்று சொன்னேன்.
"ரொம்ப தாங்க்ஸ் மேடம். எனக்குப்  புக்ஸ்  என்றால் உயிர்... அப்போ, நீங்களும் என்னை மாதிரிதானா? வெரி குட்' என்றான்.
"இல்லை... இல்லை... உங்கள்  மாதிரி  நான் இல்லை... நீங்கள்தான் என்னை மாதிரி' என்று ஜோக் அடித்தேன்.
"ஆமாம்... ஆமாம்...என்று சிரித்தபடியே, "அடடே... நீங்கள்  எதற்காக  என்னைத் தேடி வந்தீர்கள்  என்று கேட்கவில்லையே?' என்றான்.
எனக்கு வேண்டிய  புள்ளி விவரங்கள் பட்டியலை அவனிடம் கொடுத்துவிட்டு, "இது  அர்ஜன்ட் இல்லை... நாளைக்குக் கொடுத்தால் போதும்' என்றேன்.
"ஓ.கே.' என்றான்.  நான் என் அறைக்கு வந்து விட்டேன்.
பத்து நிமிஷம் கழித்து, அந்தப் பையன் என் அறைக்கு வந்தான். "இந்தாங்க மேடம்... நீங்கள் கேட்ட புள்ளி விவரங்கள்' என்று ஆறு, ஏழு பேப்பர்களைக் கொடுத்தான்.
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை!
அவன் புத்தகப் பிரியன். நானும் அப்படி. ஆகவே  நாங்கள் ஒரே "ஜாதி' ஆகிவிட்டோம். அதனால் "மனிதன் மாறி விட்டான்' '' என்று முடித்தாள்  என் பெண்.
                    முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியதுசகோதரி திருமதி எஸ்ஷோபனா.  அவருக்கு என் நன்றி!


3 comments:

  1. ரோஸ் கென்னடி அவர்களைப்பற்றிய இரண்டு செய்திகளும் ரொம்ப சுவாரசியமானவை. ரசித்துப் படித்தேன் (இரண்டுன்னு குழம்பிடாதீங்க. ஒண்ணு இங்க இருக்கு. இன்னோண்ணு பழைய இடுகைல இருக்கு)

    இரண்டாவது - இருவர் ஃப்ரெண்ட்லியாக ஏதேனும் ஒரு பொதுவான அம்சம் இருக்கணும். அதுதான் 'புள்ளிவிவரப் புலி' நட்பானதன் ரகசியம். ரசித்தேன்.

    தலைப்பில் (கடுகு தாளிப்பு), நீல சக்கரம் (சுக்கான் மாதிரி) நல்லா அழகா இருக்கு.

    ReplyDelete
  2. ரசிக மகா திலகம் நெல்லை அவர்களுக்கு,
    மிக்க நன்றி.
    -கடுகு

    ReplyDelete
  3. ரோஸ் கென்னடி பத்தின தகவல்கள் புதுசு! நீங்க போடற டிசைன்களும் புதுசு! நானும் முயல வேண்டும். உட்கார நேரம் தான் கிடைக்கலை! :)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!